வாளொடென் வன்கண்ணர் அல்லார்க்கு நூலொடென்நுண்ணவை அஞ்சு பவர்க்கு.
அவையஞ்சாமை (குறள் எண்: 726)
திருக்குறள், மனித இனத்திற்கு ஒரு மனிதன் தந்த வரம்.
உலகின் தலைசிறந்த இலக்கியங்களுள் மிக முக்கியமானது திருக்குறள்.
இது பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் ஒன்று. இதனை இயற்றியவர் திருவள்ளுவர். இது, மனித வாழ்விற்கு அடிப்படையான, இன்றியமையாத உயர்ந்த அறங்களை போதிக்கும் நூல்.
இந்நூல் அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்னும் முப்பெரும் பிரிவுகள் கொண்டது. இவை ஒவ்வொன்றும் "இயல்" என்னும் பகுதிகளாக மேலும் பகுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு இயலும் சில குறிப்பிட்ட அதிகாரங்களைக் கொண்டது. ஒவ்வொரு அதிகாரமும் பத்து பாடல்களைத் தன்னுள் அடக்கியது.
இவ்வாறாக, 133 அதிகாரங்களும், ஒவ்வொன்றும் 10 பாடல்களுடன் மொத்தம் 1330 குறள்கள் உள்ளடக்கிய இலக்கியம் இது.
வாழ்வியலின் அனைத்து கூறுகளையும் உள்ளடக்கியதால் திருக்குறள் அனைத்து தரப்பினராலும் போற்றப்பட்டு பல பெயர்களால் அழைப்படுகிறது.
இன, மொழி, பாலின பேதங்களின்றி காலம் கடந்தும் பொருந்துவது போல் அமைந்துள்ளதால் இந்நூல் "உலகப் பொது மறை" என்றும், மூன்று பெரும் பால் பிரிவுகளைக் கொண்டதால் இதனை முப்பால் என்றும் அழைக்கப்படுகிறது.
இப்பாடல்கள் அனைத்துமே குறள் வெண்பா என்னும் வெண்பா வகையைச் சேர்ந்தவை. இவ்வகை வெண்பாக்களால் ஆன இலக்கியமாக நமக்குக் கிடைக்கப்பெற்ற ஒரே நூல் இதுதான். குறள் வெண்பாக்களால் ஆனமையால் "குறள்' என்றும் "திருக்குறள்" என்றும் இது பெயர் பெற்றது.
திருக்குறளின் வேறு பெயர்கள்:
1) முப்பால் 2) உத்தரவேதம் 3) தெய்வநூல் 4) பொதுமறை
5) பொய்யாமொழி 6) வாயுறை வாழ்த்து 7) தமிழ் மறை 8) திருவள்ளுவம்
திருக்குறளின் காலம் குறித்து பல வேறுபட்ட தகவல்கள் உண்டு. திருக்குறளின் காலமாக பலராலும் கணிக்கப்படுவது கி.பி 2 ஆம் நூற்றாண்டு.
திருவள்ளுவரது இயற்பெயர், வாழ்ந்த இடம் உறுதியாகத் தெரியவில்லை எனினும் அவர் கி.மு. முதல் நூற்றாண்டில், தற்பொழுதைய சென்னை நகருக்கருகில்,மயிலாப்பூரில் வாழ்ந்து வந்தார் என்று அறியப்படுகிறது. காவிரிப்பாக்கம் அருகில் வாழ்ந்து வந்த மார்கசெயன் என்பவர் அவரது கவித்திறன் கண்டு அவரது ஒரு புதல்வியான வாசுகியை வள்ளுவருக்கு மணம் முடித்ததாக அறியப்படுகிறது. ஆதி-பகவன் என்ற பெற்றோருக்கு பிறந்ததாகவும் மதுரை நகரில் வாழ்ந்ததாகவும் கருத்துண்டு.
திருவள்ளுவரின் காலம் உறுதியாகத் தெரியவில்லை; எனினும் அவரது பிறந்த ஆண்டு கி.மு 31 எனக் கொண்டு திருவள்ளுவர் ஆண்டு கணக்கிடப்படுகிறது.
திருவள்ளுவரின் வெறு பெயர்கள்,
1) நாயனர் 2) தெய்வப்புலவர் 3) நான்முகனார் 4) தேவர் 5) மாதானுபங்கி
6) செந்நாப்போதார் 7) பெருநாவலர் 8) புலவர் 9) பொய்யில் புலவர்
அதிகாரம் | ஒப்புரவறிதல் |
குறள் - பால் | அறத்துப்பால் |
குறள் - இயல் | இல்லறவியல் |
குறள் - வரிசை | 211 212 213 214 215 216 217 218 219 220 |
ஒப்புரவறிதல் = ஒப்புரவு + அறிதல்
ஒப்புரவு - உலக நடைமுறை
உலக நடைமுறையை அறிந்து நடத்தல். ஒப்புரவின் சிறப்பையும், ஒப்புரவு அறிதலால் தனக்கும் பிறருக்கும் ஏற்படும் பயனையும், ஒப்புரவு அறிபவர்களின் தன்மையையும் விளக்கும் அதிகாரம்.
கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்
டென்னாற்றுங் கொல்லோ வுலகு.
கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு
என்ஆற்றும் கொல்லோ உலகு.
கைம்மாறு - பதில் உதவி
வேண்டா - வேண்டுவது அல்ல
கடப்பாடு - ஓப்புரவு
மாரிமாட்டு - மேகங்களுக்கு (மாரி - மேகம்)
என் ஆற்றும் - என்ன செய்யும் (கொல்லோ - அசைநிலை)
உலகு - உலகம்
கைமாறு எதிர்பார்த்துச் செய்வதல்ல ஓப்புரவு. மழை மேகங்களுக்கு இந்த உலகம் என்ன கைமாறு செய்துவிட முடியும்?
மு.வ உரை:
இந்த உலகத்தார் தமக்கு உதவும் மழைக்கு என்ன கைம்மாறு செய்கின்றனர்? மழை போன்றவர் செய்யும் உதவிகளும் கைம்மாறு வேண்டாதவை.
பரிமேலழகர் உரை:
மாரிமாட்டு உலகு என் ஆற்றும் - தமக்கு நீர் உதவுகின்ற மேகங்களினிடத்து உயிர்கள் என்ன கைம்மாறு செய்யா நின்றன, கடப்பாடு கைம்மாறு வேண்டா - ஆகலான், அம்மேகங்கள் போல்வார் செய்யும் ஒப்புரவுகளும் கைம்மாறு நோக்குவன அல்ல. ('என் ஆற்றும்?' என்ற வினா, 'யாதும் ஆற்றா' என்பது தோன்ற நிற்றலின், அது வருவித்துரைக்கப்படும். தவிரும் தன்மைய அல்ல என்பது 'கடப்பாடு' என்னும் பெயரானே பெறப்பட்டது. செய்வாராது வேண்டாமையைச் செய்யப்படுவனமேல் ஏற்றினார்.)
மணக்குடவர் உரை:
ஒப்புரவு செய்யுங்காற் கைம்மாறு கருதிச் செய்ய வேண்டா: எல்லார்க்கும் நல்வழி சுரக்கின்ற மாரிக்கு உலகம் கைம்மாறு செய்தலுண்டோ?
கடப்பாடு- ஒப்புரவு. இஃது ஒப்புரவாவது கைம்மாறு வேண்டாத கொடை யென்று கூறிற்று.
கலைஞர் உரை:
கைம்மாறு கருதி மழை பொழிவதில்லை; அந்த மழையைப்
போன்றவர்கள் கைம்மாறு கருதி எந்த உதவியும் செய்பவர்கள் அல்லர்.
சாலமன் பாப்பையா உரை:
பிறர்க்கு உதவுவது, அவ்வுதவியைப் பெற்றவர் திரும்பச் செய்வதை எதிர்பார்த்து அன்று; ஒருவர் செய்ததற்குத் திரும்பச் செய்துதான் ஆகவேண்டும் என்றால் மழை தரும் மேகங்களுக்கு இந்த உலகம் திரும்ப என்ன செய்துவிட முடியும்?
தாளாற்றித் தந்த பொருளெல்லாந் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு.
தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு.
தாளாற்றி (தாள் + ஆற்றி) - முயற்சி செய்து (தாள் - முயற்சி; ஆற்றி - செய்து)
தந்த - ஈட்டித் தந்த
பொருளெல்லாம் - செல்வமெல்லாம்
தக்கார்க்கு - தகுந்தவர்களுக்கு
வேளாண்மை - ஒப்புரவு
செய்தற் பொருட்டு - செய்வதற்கே ஆகும்
ஒருவன், முயற்சி செய்து ஈட்டிய பொருளெல்லாம் தகுந்தவர்களுக்கு உதவி செய்வதற்கே ஆகும்.
மு.வ உரை:
ஒப்புரவாளன் தன்னால் இயன்ற முயற்சி செய்து சேர்த்த பொருள் எல்லாம் தக்கவர்க்கு உதவி செய்வதற்கே ஆகும்.
பரிமேலழகர் உரை:
தக்கார்க்கு - தகுதி உடையார்க்கு ஆயின், தாள் ஆற்றித் தந்த பொருள் எல்லாம் - முயல்தலைச் செய்து ஈட்டிய பொருள் முழுவதும், வேளாண்மை செய்தற் பொருட்டு - ஒப்புரவு செய்தற் பயத்தவாம். (பிறர்க்கு உதவாதார் போலத் தாமே உண்டற்பொருட்டும் வைத்து இழத்தற்பொருட்டும் அன்று என்பதாயிற்று.)
மணக்குடவர் உரை:
ஒருவன் முயன்று ஈட்டிய பொருளெல்லாம் தகுதி யுடையார்க்கு உபகரித்தற்காகவாம்.
இது பொருளுண்டானால் ஒப்புரவு செய்கவென்றது.
கலைஞர் உரை:
தகுதியுடையோர் நலனுக்கு உதவிடும் பொருட்டே ஒருவன் முயன்று
திரட்டிய பொருள் பயன்பட வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை:
முயன்று சம்பாதித்த பொருள் எல்லாம், உழைக்க முடியாமல் பொருள் தேவைப்படுவோர்க்கு உதவுவதற்கே.
புத்தே ளுலகத்து மீண்டும் பெறற்கரிதே
யொப்புரவி னல்ல பிற.
புத்தேள் உலகத்தும் ஈண்டும் பெறலரிதே
ஒப்புரவின் நல்ல பிற.
புத்தேள் உலகத்தும் - தேவர் உலகத்திலும் (புத்தேள் - தேவர்கள்)
ஈண்டும் - இந்த உலகத்திலும்
பெறலரிதே (பெறல் + அரிதே) - பெறுவதற்கு அரிது
ஒப்புரவின் - ஒப்புரவை விட
நல்ல பிற - பிற நல்லவை
ஒப்புரவை விட நல்ல ஒரு செயலை தேவர் உலகத்திலும் இவ்வுலகத்திலும் காண்பது அரிது.
மு.வ உரை:
பிறர்க்கு உதவி செய்து வாழும் ஒப்புரவைப்போல நல்லனவாகிய வேறு அறப்பகுதிகளைத் தேவருலகத்திலும் இவ்வுலகத்திலும் பெறுதல் இயலாது.
பரிமேலழகர் உரை:
புத்தேள் உலகத்தும் ஈண்டும் - தேவர் உலகத்தும் இவ்வுலகத்தும், ஒப்புரவின் நல்ல பிற பெறல் அரிது - ஒப்புரவுபோல நல்லன பிற செயல்களைப் பெறுதல் அரிது. ( ஈவாரும் ஏற்பாரும் இன்றி எல்லோரும் ஒரு தன்மையராகலின் புத்தேள் உலகத்து அரிதாயிற்று, யாவர்க்கும் ஒப்பது இது போல் பிறிதொன்று இன்மையின், இவ்வுலகத்து அரிதாயிற்று. 'பெறற்கரிது' என்று பாடம் ஓதி, 'பெறுதற்குக் காரணம் அரிது' என்று உரைப்பாரும் உளர். இவை மூன்று பாட்டானும் ஒப்புரவினது சிறப்புக் கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
ஒப்புரவு செய்தலின் நன்றாயிருப்பது தேவருலகத்தினும் இவ்வுலகத்தினும் பெறுதற்கு அரிதாம்.
கலைஞர் உரை:
பிறர்க்கு உதவிடும் பண்பாகிய "ஒப்புரவு" என்பதைவிடச் சிறந்த
பண்பினை இன்றைய உலகிலும், இனிவரும் புதிய உலகிலும் காண்பது
அரிது.
சாலமன் பாப்பையா உரை:
தேவர்கள் உலகத்திலும் இப்பூவுலகிலும், உழைக்க முடியாதவர்க்கு உதவுவது போன்ற வேறு நல்ல செயல்களைப் பெறுவது கடினம்.
ஒத்த தறிவா னுயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும்.
ஒத்தது அறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும்.
ஒத்தது - உலக நடைக்கு ஏற்ப
அறிவான் - அறிந்து வாழ்பவன்
உயிர்வாழ்வான் - உயிருடன் வாழ்பவன் ஆவான்
மற்றையான் - மற்றவர்கள்
செத்தாருள் - செத்தவர்களுக்குள் ஒருவனாக
வைக்கப்படும் - வைத்துக் கருதப்படுவான்
ஒப்புரவை அறிந்து பிறர்க்கு உதவியாக வாழ்கின்றவன், உயிர்வாழ்கின்றவன் ஆவான்; அவ்வாறு வாழாத மற்றவன் செத்தவனாகக் கருதப்படுவான்.
மு.வ உரை:
ஒப்புரவை அறிந்து போற்றிப் பிறர்க்கு உதவியாக வாழ்கின்றவன் உயிர்வாழ்கின்றவன் ஆவான்; மற்றவன் செத்தவருள் சேர்த்துக் கருதப்படுவான்.
பரிமேலழகர் உரை:
உயிர் வாழ்வான் ஒத்தது அறிவான் - உயிரோடு கூடி வாழ்வானாவான் உலக நடையினை அறிந்து செய்வான், மற்றையான் செத்தாருள் வைக்கப்படும் - அஃதறிந்து செய்யாதவன் உயிருடையானே யாயினும் செத்தாருள் ஒருவனாகக் கருதப்படும்.(உயிரின் அறிவும் செயலும் காணாமையின், 'செத்தாருள் வைக்கப்படும்' என்றார். இதனான் உலகநடை வழு வேத நடை வழுப்போலத் தீர்திறன் உடைத்து அன்று என்பது கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
ஒப்புரவறிவான் உயிர்வாழ்வானென்று சொல்லப்படுவன். அஃதறியான் செத்தவருள் ஒருவனாக எண்ணப்படுவன்.
இஃது ஒப்புரவறியாதார் பிணத்தோ டொப்ப ரென்றது.
கலைஞர் உரை:
ஒப்புரவை அறிந்து பிறருக்கு உதவியாகத் தன் வாழ்வை அமைத்துக்
கொள்பவனே உயிர்வாழ்பவன் எனக் கருதப்படுவான்; அதற்கு மாறானவன்
இறந்தவனே ஆவான்.
சாலமன் பாப்பையா உரை:
உழைக்கும் சக்தி அற்றவர்க்கு உதவுபவனே உயிரோடு வாழ்பவன். உதவாதவன் இருந்தாலும் இறந்தவனாகவே எண்ணப்படுவான்.
ஊருணி நீர்நிறைந் தற்றே யுலகவாம்
பேரறி வாளன் றிரு.
ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்
பேரறி வாளன் திரு.
ஊருணி - ஊரின் பொதுவான நீர்நிலை
நீர்நிறைந்து - நீர் நிறைந்திருத்தல்
அற்றே - போன்றது
உலகவாம் (உலகு + அவாம்): உலக நலனை விரும்பும் (அவா - விரும்புதல்)
பேரறிவாளன் (பெரிய + அறிவாளன்): பெரிய அறிஞன்
திரு - செல்வம்
ஒப்புரவு அறிந்து உலக நலனை விரும்பும் பேரறிவாளனின் செல்வம், ஊர் மக்கள் அனைவருக்கும் பயன் தரும் நீர் நிறைந்த ஊருணியைப் போன்றதாகும்.
மு.வ உரை:
ஒப்புரவினால் உலகம் வாழுமாறு விரும்பும் பேரறிவாளியின் செல்வம், ஊரார் நீருண்ணும் குளம், நீரால் நிறைந்தாற் போன்றது.
பரிமேலழகர் உரை:
உலகு அவாம் பேர் அறிவாளன் திரு - உலகநடையை விரும்பிச் செய்யும்பெரிய அறிவினை யுடையவனது செல்வம், ஊருணி நீர் நிறைந்தற்று - ஊரின் வாழ்வார் தண்ணீர் உண்ணும் குளம் நீர் நிறைந்தாற் போலும். (நிறைதல் என்னும் இடத்து நிகழ் பொருளின் தொழில் இடத்தின் மேல் ஏற்றப்பட்டது. பாழ் போகாது நெடிது நின்று எல்லார்க்கும் வேண்டுவன தப்பாது உதவும் என்பதாம்.)
மணக்குடவர் உரை:
ஊர் உண்கின்றகேணி நீர் நிறையப் புகுந்தாலொக்கும்: உலகத்தாரெல்லாராலும் நச்சப்படுகின்ற பெரிய வொப்புரவு அறிவானது செல்வம்.
இஃது ஒப்புரவறிவார்க்கு உளதாகிய செல்வம் நச்சிச்சென்றார் வேண்டியவாறு முகக்கலா மென்றது.
கலைஞர் உரை:
பொதுநல நோக்குடன் வாழ்கின்ற பேரறிவாளனின் செல்வமானது ஊர்
மக்கள் அனைவருக்கும் பயன் தரும் நீர் நிறைந்த ஊருணியைப்
போன்றதாகும்.
சாலமன் பாப்பையா உரை:
உலகின் வளர்ச்சிப் போக்கை அறிந்து செயற்படும் பேர் அறிவாளனின் செல்வம், நீர் நிறைந்த ஊருணி எல்லார்க்கும் பொதுவாவது போல் பொதுவாகும்.
பயன்மர முளளுர்ப் பழுத்தற்றாற் செல்வ
நயனுடை யான்கட் படின்.
பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்
நயனுடை யான்கண் படின்.
பயன்மரம் - பயன் தரும் மரம்
உள்ளூர் – ஊருக்குள், ஊர் நடுவில்
பழுத்தற்றால் (பழுத்து + அற்றால்) - பழுத்திருப்பது போன்றது
செல்வம் - செல்வம்
நயனுடையான்கண் - உதவி செய்கிறவனிடத்தில் (நயன் - உதவி; கண் - இடம்)
படின் – உண்டானால்
ஒப்புரவு என்னும் நற்பண்பு உடையவனிடத்தில் சேரும் செல்வம், ஊரின் நடுவில் அனைவருக்கும் பயன் தரும் மரம் பழுத்திருப்பது போன்றதாகும்.
மு.வ உரை:
ஒப்புரவாகிய நற்பண்பு உடையவனிடம் செல்வம் சோந்தால், அஃது ஊரின் நடுவே உள்ள பயன் மிகுந்த மரம் பழங்கள் பழுத்தாற் போன்றது.
பரிமேலழகர் உரை:
செல்வம் நயன் உடையான்கண் படின் - செல்வம் ஒப்புரவு செய்வான் கண்ணே படுமாயின், பயன் மரம் உள்ளூர்ப் பழுத்தற்று - அது பயன்படுமரம் ஊர் நடுவே பழுத்தாற்போலும். (உலக நீதி பலவற்றுள்ளும் ஒப்புரவு சிறந்தமையின் அதனையே 'நயன்' என்றார்.எல்லார்க்கும் எளிதில் பயன் கொடுக்கும் என்பதாம்.)
மணக்குடவர் உரை:
பயன்படுமரம் ஊர்நடுவே பழுத்தாற் போலும்: பிறரால் விரும்பப்படுவான்மாட்டுச் செல்வ முண்டாயின்.
இது வேண்டாதார்க்கும் பயன்படு மென்றது.
கலைஞர் உரை:
ஈர நெஞ்சம் கொண்டவனிடம் செல்வம் சேருமேயானால் அது, ஊரின்
நடுவே செழித்து வளர்ந்த மரம், பழுத்துக் குலுங்குவது போல
எல்லோர்க்கும் பயன்படுவதாகும்.
சாலமன் பாப்பையா உரை:
பிறரால் விரும்பப்படுபவனிடம் சேரும் செல்வம், உண்ணத் தகும், கனிதரும் மரம் ஊருக்கு உள்ளே பழுத்திருப்பதைப் போல எல்லார்க்கும் பொதுவாகும்.
மருந்தாகித் தப்பா மரத்தற்றாற் செல்வம்
பெருந்தகை யான்கட் படின்.
மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்
பெருந்தகை யான்கண் படின்.
மருந்தாகி - நோய்களுக்கு மருந்தாகி
தப்பா - தவறாமல் பயன்தரும்
மரத்தற்றால் (மரத்து + அற்றால்) : மரத்தைப் போன்றது (அற்று - போன்று)
செல்வம் - செல்வம்
பெருந்தகையான் (பெரிய + தகையான்): பெரும் கருணையாளன் (தகை - அருள், குணம்)
கண் - இடம்
படின் - சேர்ந்தால்
ஒப்புரவாகிய பெருந்தகைமை உடையவனிடம் செல்வம் சேர்ந்தால், அது எல்லா உறுப்புக்களும் மருந்தாகிப் பயன்படத் தவறாத மரம் போன்றது.
மு.வ உரை:
ஒப்புரவாகிய பெருந்தகைமை உடையவனிடம் செல்வம் சேர்ந்தால், அஃது எல்லா உறுப்புக்களும் மருந்தாகிப் பயன்படத் தவறாத மரம் போன்றது.
பரிமேலழகர் உரை:
செல்வம் பெருந்தகையான்கண் படின் - செல்வம் ஒப்புரவு செய்யும் பெரிய தகைமையுடையான் கண்ணே படுமாயின், மருந்து ஆகித் தப்பா மரத்தற்று - அஃது எல்லா உறுப்பும் பிணிகட்கு மருந்தாய்த் தப்பாத மரத்தை ஒக்கும். (தப்புதலாவது, கோடற்கு அரிய இடங்களில் இன்றாதல், மறைந்து நின்றாதால் , காலத்தான் வேறுபட்டாதல், பயன்படாமை. தன் குறை நோக்காது எல்லார் வருத்தமும் தீர்க்கும் என்பதாம். இவை மூன்று பாட்டானும் கடப்பாட்டாளனுடைய பொருள் பயன்படுமாறு கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
பிணிமருந்தாகித் தேடுவார்க்கு மறைதலில்லாத மரத்தை யொக்கும், செல்வமானது பெருந்தகைமையான்மாட்டு உண்டாயின்.
தப்புதலென்றது ஒளித்தலை.
கலைஞர் உரை:
பிறருக்கு உதவிடும் பெருந்தன்மையாம் ஒப்புரவு உடையவனிடம்,
செல்வம் சேர்ந்தால் அது ஒரு நல்ல மரத்தின் எல்லா உறுப்புகளும்
மருந்தாகப் பயன்படுவது போன்றதாகும்.
சாலமன் பாப்பையா உரை:
பெரும் பண்பாளனிடம் சேரும் செல்வம், எல்லா உறுப்புகளாலும் மருந்து ஆகிப் பயன்படுவதிலிருந்து தப்பாத மரம் போலப் பொதுவாகும்.
இடனில் பருவத்து மொப்புரவிற் கொல்கார்
கடனறி காட்சி யவர்.
இடனில் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார்
கடனறி காட்சி யவர்.
இடனில் (இடன் + இல்): இடுவதற்கு இல்லாத
பருவத்தும் - காலத்திலும்
ஒப்புரவிற்கு - பிறருக்கு உதவி வாழும் ஒப்புரவிற்கு
ஒல்கார் - தளராதவர்
கடனறி (கடன் + அறி): கடமையை அறிந்த
காட்சியவர் - அறிவுடையோர்
செல்வம் குறைந்த காலத்திலும் பிறருக்கு உதவி வாழும் ஒப்புரவிற்கு தளர மாட்டார்கள், தங்கள் கடமையை அறிந்த அறிவுடையோர்.
மு.வ உரை:
ஒப்புரவு அறிந்து ஒழுகுதலாகிய தம் கடமை அறிந்த அறிவை உடையவர், சொல்வளம் இல்லாத காலத்திலும் ஒப்புரவுக்குத் தளர மாட்டார்.
பரிமேலழகர் உரை:
இடன் இல் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார் - செல்வம் சுருங்கிய காலத்தும் ஒப்புரவு செய்தற்குத் தளரார், கடன்அறி காட்சியவர் - தாம் செய்யத் தகுந்தவற்றை அறிந்த இயற்கை அறிவுடையார். (பிற எல்லாம் ஒழியினும், இஃது ஒழியார் என்பதாம்.)
மணக்குடவர் உரை:
செல்வம் விரிவற்ற காலத்திலும் ஒப்புரவிற்குத் தளரார்: ஒப்புரவை யறியும் அறிவுடையார்.
இது செல்வம் விரிவில்லாத காலத்தினும் செய்யவேண்டு மென்றது.
கலைஞர் உரை:
தம்மிடம் வளம் நீங்கி, வறுமை வந்துற்ற காலத்திலும்,பிறர்க்கு உதவிடும்
ஒப்புரவில் தளராதவர், கடமையுணர்ந்த தகைமையாளர்.
சாலமன் பாப்பையா உரை:
செய்யவேண்டிய கடமையை அறிந்த அறிவாளிகள், தம்மிடம் கொடுக்க இடம் இல்லாக் காலத்திலும், உழைக்கும் சக்தி அற்றவர்க்கு உதவத் தயங்க மாட்டார்கள்.
நயனுடையா னல்கூர்ந்தா னாதல் செயும்நீர
செய்யா தமைகலா வாறு.
நயனுடையான் நல்கூர்ந்தான் ஆதல் செயும்நீர
செய்யாது அமைகலா ஆறு.
நயனுடையான் - கொடையாளன்
நல்கூர்ந்தானாதல் (நல்கூர்ந்தான் + ஆதல்) - வறுமையுடையவன் ஆகுதல்
செயும் - தவறாமல் செய்யும்
நீர - நீர்மை - தன்மை
செய்யாது - செய்ய முடியாமல்
அமைகலாவாறு (அமைகலா + ஆறு): வருந்துகின்ற தன்மையே ஆகும் (ஆறு - தன்மை)
ஒப்புரவென்னும் நற்பண்பு உடையவனுக்கு வறுமை என்பது செய்யக்கூடிய உதவிகளைப் பிறர்க்குச் செய்யமுடியாது வருந்தும் நிலைதான்.
மு.வ உரை:
ஒப்புரவாகிய நற்பண்பு உடையவன் வறுமை உடையவனாதல், செய்யத்தக்க உதவிகளைச் செய்யாமல் வருந்துகின்ற தன்மையாகும்.
பரிமேலழகர் உரை:
நயன் உடையான் நல்கூர்ந்தான் ஆதல் - ஒப்புரவு செய்தலை உடையான் நல்கூர்ந்தான் ஆதலாவது, செயும் நீர செய்யாது அமைகலா ஆறு - தவிராது செய்யும் நீர்மையையுடைய அவ்வொப்புரவுகளைச் செய்யப்பெறாது வருந்துகின்ற இயல்பாம். (தான் நுகர்வன நுகரப் பெறாமை அன்று என்பதாம். இவ்விரண்டு பாட்டானும் வறுமையான் ஒப்புரவு ஒழிதற்பாற்று அன்று என்பது கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
நயனுடையான் நல்கூர்ந்தா னாகின்றது செய்ய வேண்டுவன செய்யாதே யமைய மாட்டாத இயல்பாம்.
இது செல்வங் குறைபடினுஞ் செய்வரென்றது.
கலைஞர் உரை:
பிறர்க்கு உதவி செய்வதையே கடமையாகக் கொண்ட
பெருந்தகையாளன் ஒருவன், வறுமையடைந்து விட்டான் என்பதை
உணர்த்துவது அவனால் பிறர்க்கு உதவிட முடியாமல் செயலிழந்து போகும்
நிலைமைதான்.
சாலமன் பாப்பையா உரை:
உழைக்கும் சக்தி அற்றவர்க்கு உதவும் உள்ளம் உடையவன் வறியவன் ஆவது, செய்யக்கூடிய உதவிகளைப் பிறர்க்குச் செய்யமுடியாது வருந்தும் போதுதான்.
ஒப்புரவி னான்வருங் கேடெனின் னஃதொருவன்
விற்றுக்கோட் டக்க துடைத்து.
ஒப்புரவி னால்வரும் கேடெனின் அஃதொருவன்
விற்றுக்கோள் தக்கது உடைத்து.
ஒப்புரவினால் வரும் - பிறருக்கு உதவி செய்வதால் வரும்
கேடெனின் (கேடு + எனின்): கேடு என்றால்
அஃதொருவன் - அதை ஒருவன்
விற்று - தன்னை விற்றேனும்
கோள் தக்கது - கொள்ளத் தகுந்த
உடைத்து - உடையதாகும்
ஒப்புரவால் கேடு வரும் என்றால், அக்கேடு, ஒருவன் தன்னை விற்றாவது வாங்கிக் கொள்ளும் தகுதி உடையதாகும்.
மு.வ உரை:
ஒப்புரவால் கேடு வரும் என்றால், அக்கேடு ஒருவன் தன்னை விற்றாவது வாங்கிக் கொள்ளும் தகுதி உடையதாகும்.
பரிமேலழகர் உரை:
ஒப்புரவினால் கேடு வரும் எனின் - ஒப்புரவு செய்தலான் ஒருவனுக்குப் பொருட்கேடு வரும் என்பார் உளராயின், அஃது ஒருவன் விற்றுக்கோள் தக்கது உடைத்து - அக்கேடு தன்னை விற்றாயினும் கொள்ளும் தகுதியை உடைத்து. (தன்னைவிற்றுக் கொள்ளப்படுவதொரு பொருள் இல்லை அன்றே? இஃதாயின் அதுவும் செய்யப்படும் என்றது, புகழ் பயத்தல் நோக்கி. இதனான் ஒப்புரவினால் கெடுவது கேடு அன்று என்பது கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
ஒருவன் ஒப்புரவு செய்தலினாலே பொருட்கேடு வருமென்று சொல்லின், அக்கேட்டைக் கேடாகச் சேர்த்துக் கொள்ளல் கூடாது. அஃது ஒன்றை விற்று ஒன்றைக் கொள்ளுகின்ற வாணிகமாகக் கொள்ளுந் தகுதியுடைத்து.
கெட்டானாயினும் அதனை ஆக்கமாகக் கொள்ளல் தகும்: பிற்பயப்பன நன்மையாதலான்.
கலைஞர் உரை:
பிறருக்கு உதவுகின்ற சிறப்புடைய உலக ஒழுக்கம், கேடு விளைவிக்கக்
கூடியதாக இருப்பின், அக்கேடு, ஒருவன் தன்னை விற்றாவது வாங்கிக்
கொள்ளக் கூடிய மதிப்புடையதாகும்.
சாலமன் பாப்பையா உரை:
இருப்பதைப் பிறர்க்குக் கொடுத்துவிட்டால், நாளை நமக்குத் தீமை வருமே என்று சொன்னால், தன்னையே விலையாகக் கொடுத்து அந்தத் தீமை வாங்கத்தக்கதே.
Chapter (அதிகாரம்) | Duty to Society (ஒப்புரவறிதல்) |
Section (குறள் - பால்) | Virtue (அறத்துப்பால்) |
Chapter Group (குறள் - இயல்) | Domestic Virtue (இல்லறவியல்) |
Order (குறள் - வரிசை) | 211 212 213 214 215 216 217 218 219 220 |
Duty to Society
கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்
டென்னாற்றுங் கொல்லோ வுலகு.
கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு
என்ஆற்றும் கொல்லோ உலகு.
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Benevolence seeks not a return. What does the world give back to the clouds ?
தாளாற்றித் தந்த பொருளெல்லாந் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு.
தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு.
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
All the wealth acquired with perseverance by the worthy is for the exercise of benevolence
புத்தே ளுலகத்து மீண்டும் பெறற்கரிதே
யொப்புரவி னல்ல பிற.
புத்தேள் உலகத்தும் ஈண்டும் பெறலரிதே
ஒப்புரவின் நல்ல பிற.
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
It is difficult to obtain another good equal to benevolence either in this world or in that of the gods
ஒத்த தறிவா னுயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும்.
ஒத்தது அறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும்.
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
He truly lives who knows (and discharges) the proper duties (of benevolence) He who knows them not will be reckoned among the dead
ஊருணி நீர்நிறைந் தற்றே யுலகவாம்
பேரறி வாளன் றிரு.
ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்
பேரறி வாளன் திரு.
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
The wealth of that man of eminent knowledge who desires to exercise the benevolence approved of by the world, is like the full waters of a city-tank
பயன்மர முளளுர்ப் பழுத்தற்றாற் செல்வ
நயனுடை யான்கட் படின்.
பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்
நயனுடை யான்கண் படின்.
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
The wealth of a man (possessed of the virtue) of benevolence is like the ripening of a fruitful tree in the midst of a town
மருந்தாகித் தப்பா மரத்தற்றாற் செல்வம்
பெருந்தகை யான்கட் படின்.
மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்
பெருந்தகை யான்கண் படின்.
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
If wealth be in the possession of a man who has the great excellence (of benevolence), it is like a tree which as a medicine is an infallible cure for disease
இடனில் பருவத்து மொப்புரவிற் கொல்கார்
கடனறி காட்சி யவர்.
இடனில் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார்
கடனறி காட்சி யவர்.
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
The wise who know what is duty will not scant their benevolence even when they are without wealth
நயனுடையா னல்கூர்ந்தா னாதல் செயும்நீர
செய்யா தமைகலா வாறு.
நயனுடையான் நல்கூர்ந்தான் ஆதல் செயும்நீர
செய்யாது அமைகலா ஆறு.
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
The poverty of a benevolent man, is nothing but his inability to exercise the same
ஒப்புரவி னான்வருங் கேடெனின் னஃதொருவன்
விற்றுக்கோட் டக்க துடைத்து.
ஒப்புரவி னால்வரும் கேடெனின் அஃதொருவன்
விற்றுக்கோள் தக்கது உடைத்து.
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
If it be said that loss will result from benevolence, such loss is worth being procured even by the sale of one's self