வாளொடென் வன்கண்ணர் அல்லார்க்கு நூலொடென்நுண்ணவை அஞ்சு பவர்க்கு.
அவையஞ்சாமை (குறள் எண்: 726)
தமிழர் வரலாற்றில் கி.பி இரண்டாம் நூற்றாண்டுக்கு முந்தைய காலம் சங்க காலம் எனப்படும். சங்க காலம் என்பது கி.மு. 1000 முதல் கி.பி. 200 வரை என்று சிலராலும், கி.மு 300 முதல் கி.பி 300 வரையாக சில வரலாற்று அறிஞர்களாலும் குறிக்கப்படுகிறது. அக்கால அளவில் தென்மதுரை, கபாடபுரம், மதுரை அகிய பாண்டிய நகர்களில் முறையே முதல் சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் அகியன இயங்கியதாக குறிப்புகள் உள்ளன. தமிழ் ஆய்வு மன்றங்களாக விளங்கிய அவற்றில் அரிய இலக்கியங்கள் பல இயற்றப் பெற்றன; அவை சங்க இலக்கியங்கள் எனப்படும். அச்சங்கங்கள் காலப்போக்கில் மறைந்து அங்கு படைக்கப்பட்ட இலக்கியங்கள் பலவும் இயற்கைச் சீற்றங்களாலும் வேறு பல காரணங்களாலும் மறைந்தன. ஆனாலும், எஞ்சிய பாடல்களை நூல்களாகத் தொகுக்குமாறு பிற்கால மன்னர்கள் புலவர்களுக்கு ஆணையிட்டனர். அதன்படி, சங்கப் பாடல்கள் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு எனத் தொகுக்கப்பெற்றன. அவை பதினெண் மேற்கணக்கு நூல்கள் என்று வழங்கப்படுகிறது.
தமிழில் நமக்குக் கிடைத்துள்ள நூல்களில் மிகப் பழைமையானது தொல்காப்பியம். தொல்காப்பியம் கி. மு. 3ஆம் நூற்றாண்டில் தொல்காப்பியரால் எழுதப்பட்ட நூல். தொல்காப்பியத்திற்கு முன்னரே தனிப்பாடல்களாக இயற்றப்பெற்ற சங்கப் பாடல்கள் பழந்தமிழ் இலக்கணமான தொல்காப்பியத்திற்கு பொருத்தமாகத் திகழ்கின்றன.
பதினெண் மேற்கணக்கு நூல்கள்:
1) எட்டுத்தொகை
2) பத்துப் பாட்டு
எட்டுத்தொகை நூல்கள் |
பத்துப்பாட்டு நூல்கள் |
1. நற்றிணை 2. குறுந்தொகை 3. ஐங்குறுநூறு 4. கலித்தொகை 5. அகநானூறு 6. பதிற்றுப்பத்து 7. புறநானூறு 8. பரிபாடல்
|
1. திருமுருகாற்றுப்படை 2. பொருநராற்றுப்படை 3. சிறுபாணாற்றுப்படை 4. பொரும்பாணாற்றுப்படை 5. மலைபடுகடாம் 6. மதுரைக்காஞ்சி 7. குறிஞ்சிப்பாட்டு 8. பட்டினப்பாலை 9. முல்லைப்பாட்டு 10. நெடுநல்வாடை
|
எட்டுத்தொகைநூல்கள்
கடைச் சங்க காலத்திலும் அதற்கு முன்பும் வாழ்ந்த புலவர் பெருமக்களின் பாடல்களில் சிறந்தன பலவும் கடைச் சங்க காலத்தின் இறுதியில் ஒருங்கு தொகுக்கப்பட்டன. இவை தொகை நூல்கள் எனப்படுபவை.
பாவகையாலும், பொருள் வகையாலும், எட்டுத் தொகுதிகளாக அமைக்கப்பட்டன; அவையே எட்டுதொகை நூல்கள். இவற்றைப் பண்டைய உரையாசிரியர்கள் 'தொகை' என்றும், 'எண் பெருந்தொகை' என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
எட்டுத்தொகை நூல்களாவன; நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு என்பனவாம்.
நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு
ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல்
கற்றறிந்தார் ஏத்தும் கலியோடு அகம்புறம் என
இத்திறத்த எட்டுத் தொகை.
என்னும் பழம்பாடல் எட்டுத்தொகை நூல்களை வரிசைப்படுத்துகிறது.
பாடல்களை அகத்திணைப் பாடல்கள் புறத்திணைப் பாடல்கள் என்று இருவகையாகப் பிரிக்கிறது தொல்காப்பியம்.
1) புறப்பொருள் (புறம்) - பாடப்படுவோரின் வீரம், கொடை, புகழ், வெற்றி, நிலையாமை போன்ற
புறப்பொருட்களைப் பாடுவது புறத்திணையாகும்.
2) அகப்பொருள் (அகம்) - தலைவன் தலைவியின் காதல், ஊடல், பிரிவு முதலான அகப் பொருட்களைப்
பாடுவது அகத்திணையாகும்.
|
எட்டுத்தொகை |
திணை
|
பாடல்கள் |
1 |
நற்றிணை |
அகத்திணை |
400 |
2 |
குறுந்தொகை |
அகத்திணை |
402 |
3 |
ஐங்குறுநூறு |
அகத்திணை |
500 |
4 |
பதிற்றுப்பத்து |
புறத்திணை |
100 |
5 |
பரிபாடல் |
அகத்திணை |
70 (கிடைத்தது 22) |
6 |
கலித்தொகை |
அகத்திணை |
150 |
7 |
அகநானூறு |
அகத்திணை |
400 |
8 |
புறநானூறு |
புறத்திணை |
400 |
பத்துப்பாட்டு நூல்கள்
பத்துப்பாட்டு நூல்கள்: திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநெல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்.
முருகு பொருநாறு பாணிரண்டு முல்லை
பெருகு வள மதுரைக் காஞ்சி-மருவினிய
கோலநெடு நல்வாடை கோல்குறிஞ்சிப் பட்டினப்
பாலை கடாத்தொடும் பத்து.
என்னும் பழம்பாடல் பத்துப்பாட்டு நூல்களை வரிசைப்படுத்துகிறது
|
பத்துப்பாட்டு |
திணை
|
1 |
திருமுருகாற்றுப்படை |
புறத்திணை |
2 |
பொருநராற்றுப்படை |
புறத்திணை |
3 |
சிறுபாணாற்றுப்படை |
புறத்திணை |
4 |
பெரும்பாணாற்றுப்படை |
புறத்திணை |
5 |
முல்லைப்பட்டு |
அகத்திணை |
6 |
மதுரைக் காஞ்சி |
புறத்திணை |
7 |
நெடுநெல்வாடை |
அகத்திணை |
8 |
குறிஞ்சிப் பாட்டு |
அகத்திணை |
9 |
பட்டினப்பாலை |
அகத்திணை |
10 |
மலைபடுகடாம் |
புறத்திணை |
அழிவின் விளிம்பில் இருந்த அத்தகைய இலக்கியங்களைத் தேடி மீட்டெடுத்த பெருமை ‘தமிழ்த் தாத்தா’ உ.வே.சாமிநாத ஐயர், ஆறுமுக நாவலர், தாமோதம் பிள்ளை ஆகியோரைச் சாரும்.
உள்ளுறை உவமை, இறைச்சி:
சங்ககாலப் புலவர்கள் உள்ளுறை உவமை, இறைச்சி என்னும் இலக்கிய உக்திகளை மிகச் சிறப்பாகக் கையாண்டுள்ளனர். இவ்விரண்டையும் குறிப்புப் பொருள் உக்தி என்று அழைப்பர்.
குறிப்புப்பொருள் உக்தி:
1) உள்ளுறை உவமை
2) இறைச்சி
உள்ளுறை உவமை:
வெளிப்படையாகத் தெரியும் பொருளோடு பிறிதொரு பொருள் புலப்படுமாறு அமைப்பது உள்ளுறை உவமை. இதில், உவமிக்கப்படும் பொருள் வெளிப்படையாக இராது; உவமையைச் சொன்ன அளவில் உவமிக்கப்படும் பொருள் புலப்படும். உவமிக்கப்படும் பொருள் தெய்வம் அல்லாத கருப்பொருளாக இருத்தல் வேண்டும். உள்ளே மறைவாகப் படிந்து கிடக்கும் குறிப்புப் பொருளை உவமை ஆற்றலால் வெளிப்படுத்துவதால் இதனை உள்ளுறை உவமை என்றனர்.
இறைச்சி:
உள்ளுறை உவமைகளைத் தாண்டி பாடலில் வெளிப்பட்ட பொருளை மீறி உள்ளுக்குள் மறைந்திருக்கும் இன்னொரு பொருள் இறைச்சியாகும்.
பரிபாடல்
பரிபாடல் என்பது பாட்டு வகைகளுள் ஒன்று. இது இசைப்பாவாகும். இவ் வகைப் பாடல்களால் அமைந்த எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான இந்நூலும் 'பரிபாடல்' என்றே வழங்கப்பட்டு வந்துள்ளது. இந்நூல் 'பரிபாட்டு' எனவும் அழைக்கப்படுகிறது.
கடைச்சங்க காலத்தில் தொகுக்கப்பெற்ற இந்நூல் நமக்கு முழுமையாகக் கிடைக்கப்பெறவில்லை. இந்நூலில் 70 பாடல்கள் கொண்டது என்பதை இறையனார் அகப் பொருள் உரையாலும், தொல்காப்பியப் பொருளதிகாரத்தின் பேராசிரியர் உரையாலும் தெரிகிறது.
திருமாற்குஇரு-நான்கு; செவ்வேட்குமுப்பத்
தொருபாட்டு; காடுகாட்குஒன்று; - மருவினிய
வையைஇருபத்தாறு; மாமதுரைநான்குஎன்ப-
செய்யபரிபாடல்திறம்.
மேற்கண்ட செய்யுளைக் கொண்டு, திருமாலுக்கு 8 பாடல்கள், செவ்வேலுக்கு (முருகனுக்கு) 31 பாடல்கள், காடுகாட்கு (காடுகாள் என்பது காளி) 1 பாடல், வையைக்கு 26 பாடல்கள் மற்றும் மதுரைக்கு 4 பாடல்கள் என மொத்தம் 70 பாடல்களாகும்.
[காடுகாள் என்றது காளியை. 'காடுகாட்கு' என்பதற்குப் பதில் 'கார்கோளுக்கு' என்றும் பாடபேதம் உண்டு. கார்கோள் என்பது கடல். அப்பாடல் கிடைக்காததால், அந்த ஒரு பாடல் காளியைப் பற்றியதா? கடலைப் பற்றியதா? என்று இப்பொழுது அறிய வழியில்லை].
இவற்றுள், இப்பொழுது நமக்குப் பிரதிகளில் கிடைத்தது முதல் 22 பாடல்கள் மட்டுமே. எனினும், பழைய உரைகளிலிருந்தும், புறத்திரட்டுத் தொகை நூலிலிருந்தும் 2 முழுப் பாடல்களும் (திருமால் - 1, வையை - 1), சில பாடல்களின் உறுப்புகளும் தெரியவருகின்றன. ஆக, நம்மிடம் முழுமையாக கிடைக்கப்பெற்றது 24 பாடல்கள் தான்.
பாடுபொருள் |
எழுதப்பெற்றது |
கிடைக்கப்பெற்றது |
திருமால் |
8 |
7 |
முருகன் |
31 |
8 |
காளி/ கடல் |
1 |
- |
வையை |
26 |
9 |
மதுரை |
4 |
- |
மொத்தம் |
70 |
24 |
இந் நூலைத் தொகுத்தார், தொகுப்பித்தார், பெயர் தெரியவில்லை. தொகுத்த பாடல்களின் அடிவரையறை பற்றிய குறிப்பும் கிடைக்கவில்லை. பரிபாடலின் சிற்றெல்லை 25 அடி என்றும், பேரெல்லை 400 அடி என்றும், தொல்காப்பியர் வரையறுத்துள்ளனர்.
தமிழ் இலக்கிய வரலாற்றில் ஔவையார் என்ற பெயரில் பல பெண் புலவர்கள் இருந்ததாகத் தெரிகிறது. ஔவையார் எழுதியதாக கிடைத்த பாடல்களை, அவற்றின் காலம், பாடல்களின் சொல்லாடல் மற்றும் கருத்துகளைக் கொண்டு ஔவையார் என்ற பெயரில் 4 புலவர்கள் வாழ்ந்துள்ளதாக வரலாற்று அறிஞர்கள் கூறுகின்றனர்.
முதலாவதாக வாழ்ந்தவர் சங்ககால ஔவையார். இவர் சங்க இலக்கியங்களில் மொத்தம் 59 பாடல்களை இயற்றியுள்ளார்; அவை, புறநானூறு (33 பாடல்கள்), குறுந்தொகை (15 பாடல்கல்), நற்றிணை (7 பாடல்கள்), அ்கநானூறு (4 பாடல்கள்). இவர் அதியாமானுடன் மிகுந்த நட்பு கொண்டவர். இவர் அதியமான் நெடுமான் அஞ்சி, அதியமானின் மகன் பொகுட்டெழினி, சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி, பாண்டியன் கானப்பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதி, சேரமான் மாவெங்கோ ஆகிய மன்னர்களைப் பாடியுள்ளார்.
பக்திக்கால இறுதியில் விநாயகர் அகவலைப் பாடியவர் இரண்டாவது ஔவையார் .
ஆத்திசூடி, கொன்றைவேந்தன், மூதுரை, நல்வழி போன்ற நீதி நூல்களைப் பாடியவர் மூன்றாவது ஔவையார்.
தனிப்பாடல்களையும், முருகன் மீதான பக்திப் பாடல்களை யும் மிகுதியாகப் பாடியவர், இன்று நாம் பாட்டியாக வரைந்து போற்றி வணங்கும் ஒவ்வையார் இவரே.
பாடப்பட்டோன் | திருமால் |
துறை | கடவுள் வாழ்த்து |
அருமறைப் பொருள்
ஆயிரம் விரித்த வணங்குடை யருந்தலை
தீயுமிழ் திறனொடு முடிமிசை யணவர
மாயுடை மலர்மார்பின் மையில்வால் வளைமேனிச்
சேயுயர் பணைமிசை யெழில்வேழ மேந்திய
வாய்வாங்கும் வளைநாஞ்சி லொருகுழை யொருவனை;
எரிமலர் சினைஇய கண்ணை பூவை
விரிமலர் புரையு மேனியை மேனித்
திருஞெமர்ந் தமர்ந்த மார்பினை மார்பிற்
றெரிமணி பிறங்கும் பூணினை மால்வரை
எரிதிரிந் தன்ன பொன்புனை யுடுக்கையை
சேவலங் கொடியோய்நின் வலவயி னிறுத்து
மேவலுட் பணிந்தமை கூறும்
நாவ லந்தண ரருமறைப் பொருளே
ஆயிரம் விரித்த அணங்குடை அருந்தலை
தீ உமிழ் திறலொடு முடிமிசை அணவர
மாயுடை மலர் மார்பின்மை இல் வால் வளை மேனிச்
சேய் உயர் பணை மிசை எழில் வேழம் ஏந்திய
வாய் வாங்கும் வளை நாஞ்சில் ஒரு குழை ஒருவனை
எரிமலர் சினைஇய கண்ணை பூவை
விரிமலர் புரையும் மேனியைமேனித்
திரு ஞெமர்ந்து அமர்ந்த மார்பினை மார்பில்
தெரி மணி பிறங்கும் பூணினை மால் வரை
எரி திரிந்தன்ன பொன் புனை உடுக்கையை
சேவல் அம் கொடியோய் நின் வல வயின் நிறுத்தும்
மேவலுள் பணிந்தமை கூறும்
நா வல் அந்தணர் அரு மறைப் பொருளே
கடவுளைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு இயற்றப்படுவது கடவுள் வாழ்த்து.
திருமால்