வாளொடென் வன்கண்ணர் அல்லார்க்கு நூலொடென்நுண்ணவை அஞ்சு பவர்க்கு.
அவையஞ்சாமை (குறள் எண்: 726)
தமிழர் வரலாற்றில் கி.பி இரண்டாம் நூற்றாண்டுக்கு முந்தைய காலம் சங்க காலம் எனப்படும். சங்க காலம் என்பது கி.மு. 1000 முதல் கி.பி. 200 வரை என்று சிலராலும், கி.மு 300 முதல் கி.பி 300 வரையாக சில வரலாற்று அறிஞர்களாலும் குறிக்கப்படுகிறது. அக்கால அளவில் தென்மதுரை, கபாடபுரம், மதுரை அகிய பாண்டிய நகர்களில் முறையே முதல் சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் அகியன இயங்கியதாக குறிப்புகள் உள்ளன. தமிழ் ஆய்வு மன்றங்களாக விளங்கிய அவற்றில் அரிய இலக்கியங்கள் பல இயற்றப் பெற்றன; அவை சங்க இலக்கியங்கள் எனப்படும். அச்சங்கங்கள் காலப்போக்கில் மறைந்து அங்கு படைக்கப்பட்ட இலக்கியங்கள் பலவும் இயற்கைச் சீற்றங்களாலும் வேறு பல காரணங்களாலும் மறைந்தன. ஆனாலும், எஞ்சிய பாடல்களை நூல்களாகத் தொகுக்குமாறு பிற்கால மன்னர்கள் புலவர்களுக்கு ஆணையிட்டனர். அதன்படி, சங்கப் பாடல்கள் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு எனத் தொகுக்கப்பெற்றன. அவை பதினெண் மேற்கணக்கு நூல்கள் என்று வழங்கப்படுகிறது.
தமிழில் நமக்குக் கிடைத்துள்ள நூல்களில் மிகப் பழைமையானது தொல்காப்பியம். தொல்காப்பியம் கி. மு. 3ஆம் நூற்றாண்டில் தொல்காப்பியரால் எழுதப்பட்ட நூல். தொல்காப்பியத்திற்கு முன்னரே தனிப்பாடல்களாக இயற்றப்பெற்ற சங்கப் பாடல்கள் பழந்தமிழ் இலக்கணமான தொல்காப்பியத்திற்கு பொருத்தமாகத் திகழ்கின்றன.
பதினெண் மேற்கணக்கு நூல்கள்:
1) எட்டுத்தொகை
2) பத்துப் பாட்டு
எட்டுத்தொகை நூல்கள் |
பத்துப்பாட்டு நூல்கள் |
1. நற்றிணை 2. குறுந்தொகை 3. ஐங்குறுநூறு 4. கலித்தொகை 5. அகநானூறு 6. பதிற்றுப்பத்து 7. புறநானூறு 8. பரிபாடல்
|
1. திருமுருகாற்றுப்படை 2. பொருநராற்றுப்படை 3. சிறுபாணாற்றுப்படை 4. பொரும்பாணாற்றுப்படை 5. மலைபடுகடாம் 6. மதுரைக்காஞ்சி 7. குறிஞ்சிப்பாட்டு 8. பட்டினப்பாலை 9. முல்லைப்பாட்டு 10. நெடுநல்வாடை
|
எட்டுத்தொகைநூல்கள்
கடைச் சங்க காலத்திலும் அதற்கு முன்பும் வாழ்ந்த புலவர் பெருமக்களின் பாடல்களில் சிறந்தன பலவும் கடைச் சங்க காலத்தின் இறுதியில் ஒருங்கு தொகுக்கப்பட்டன. இவை தொகை நூல்கள் எனப்படுபவை.
பாவகையாலும், பொருள் வகையாலும், எட்டுத் தொகுதிகளாக அமைக்கப்பட்டன; அவையே எட்டுதொகை நூல்கள். இவற்றைப் பண்டைய உரையாசிரியர்கள் 'தொகை' என்றும், 'எண் பெருந்தொகை' என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
எட்டுத்தொகை நூல்களாவன; நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு என்பனவாம்.
நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு
ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல்
கற்றறிந்தார் ஏத்தும் கலியோடு அகம்புறம் என
இத்திறத்த எட்டுத் தொகை.
என்னும் பழம்பாடல் எட்டுத்தொகை நூல்களை வரிசைப்படுத்துகிறது.
பாடல்களை அகத்திணைப் பாடல்கள் புறத்திணைப் பாடல்கள் என்று இருவகையாகப் பிரிக்கிறது தொல்காப்பியம்.
1) புறப்பொருள் (புறம்) - பாடப்படுவோரின் வீரம், கொடை, புகழ், வெற்றி, நிலையாமை போன்ற
புறப்பொருட்களைப் பாடுவது புறத்திணையாகும்.
2) அகப்பொருள் (அகம்) - தலைவன் தலைவியின் காதல், ஊடல், பிரிவு முதலான அகப் பொருட்களைப்
பாடுவது அகத்திணையாகும்.
|
எட்டுத்தொகை |
திணை
|
பாடல்கள் |
1 |
நற்றிணை |
அகத்திணை |
400 |
2 |
குறுந்தொகை |
அகத்திணை |
402 |
3 |
ஐங்குறுநூறு |
அகத்திணை |
500 |
4 |
பதிற்றுப்பத்து |
புறத்திணை |
100 |
5 |
பரிபாடல் |
அகத்திணை |
70 (கிடைத்தது 22) |
6 |
கலித்தொகை |
அகத்திணை |
150 |
7 |
அகநானூறு |
அகத்திணை |
400 |
8 |
புறநானூறு |
புறத்திணை |
400 |
பத்துப்பாட்டு நூல்கள்
பத்துப்பாட்டு நூல்கள்: திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநெல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்.
முருகு பொருநாறு பாணிரண்டு முல்லை
பெருகு வள மதுரைக் காஞ்சி-மருவினிய
கோலநெடு நல்வாடை கோல்குறிஞ்சிப் பட்டினப்
பாலை கடாத்தொடும் பத்து.
என்னும் பழம்பாடல் பத்துப்பாட்டு நூல்களை வரிசைப்படுத்துகிறது
|
பத்துப்பாட்டு |
திணை
|
1 |
திருமுருகாற்றுப்படை |
புறத்திணை |
2 |
பொருநராற்றுப்படை |
புறத்திணை |
3 |
சிறுபாணாற்றுப்படை |
புறத்திணை |
4 |
பெரும்பாணாற்றுப்படை |
புறத்திணை |
5 |
முல்லைப்பட்டு |
அகத்திணை |
6 |
மதுரைக் காஞ்சி |
புறத்திணை |
7 |
நெடுநெல்வாடை |
அகத்திணை |
8 |
குறிஞ்சிப் பாட்டு |
அகத்திணை |
9 |
பட்டினப்பாலை |
அகத்திணை |
10 |
மலைபடுகடாம் |
புறத்திணை |
அழிவின் விளிம்பில் இருந்த அத்தகைய இலக்கியங்களைத் தேடி மீட்டெடுத்த பெருமை ‘தமிழ்த் தாத்தா’ உ.வே.சாமிநாத ஐயர், ஆறுமுக நாவலர், தாமோதம் பிள்ளை ஆகியோரைச் சாரும்.
உள்ளுறை உவமை, இறைச்சி:
சங்ககாலப் புலவர்கள் உள்ளுறை உவமை, இறைச்சி என்னும் இலக்கிய உக்திகளை மிகச் சிறப்பாகக் கையாண்டுள்ளனர். இவ்விரண்டையும் குறிப்புப் பொருள் உக்தி என்று அழைப்பர்.
குறிப்புப்பொருள் உக்தி:
1) உள்ளுறை உவமை
2) இறைச்சி
உள்ளுறை உவமை:
வெளிப்படையாகத் தெரியும் பொருளோடு பிறிதொரு பொருள் புலப்படுமாறு அமைப்பது உள்ளுறை உவமை. இதில், உவமிக்கப்படும் பொருள் வெளிப்படையாக இராது; உவமையைச் சொன்ன அளவில் உவமிக்கப்படும் பொருள் புலப்படும். உவமிக்கப்படும் பொருள் தெய்வம் அல்லாத கருப்பொருளாக இருத்தல் வேண்டும். உள்ளே மறைவாகப் படிந்து கிடக்கும் குறிப்புப் பொருளை உவமை ஆற்றலால் வெளிப்படுத்துவதால் இதனை உள்ளுறை உவமை என்றனர்.
இறைச்சி:
உள்ளுறை உவமைகளைத் தாண்டி பாடலில் வெளிப்பட்ட பொருளை மீறி உள்ளுக்குள் மறைந்திருக்கும் இன்னொரு பொருள் இறைச்சியாகும்.
அகநானூறு:
அகம் + நான்கு + நூறு => அகநானூறு
அகப்பொருள் சார்ந்த, 13 அடி முதல் 31 அடி வரையான, புலவர் பலரால் இயற்றப்பட்ட 400 பாடல்கள் கொண்ட தொகுப்பு நூல், அகநானூறு. மதுரை உப்பூரிக்கிழார் மகனார் உத்திர சன்மரால் தொகுக்கப்பட்டது. இந்நூலைத் தொகுப்பித்தவர் பாண்டியன் உக்கிரப் பெருவழுதியாவார். இந்நூலை 'நெடுந்தொகை' என்றும் அழைப்பர்.
அகப்பொருள் நூல்கள் தமிழில் பல இருந்தாலும் 'அகம்' என்ற பெயர் கொண்ட பழந்தமிழ் இலக்கியம் இது ஒன்றே.
இந்நூல், 3 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது:
1) பாடல்கள் 1 - 120 => ‘களிற்றியானை நிரை’
2) பாடல்கள் 121 - 300 => ‘மணிமிடைப் பவலம்’
3) பாடல்கள் 301 - 400 => ‘நித்திலக் கோவை’
இந்நூலில்,
1, 3, 5, 7 ....... ஆகிய வரிசைப் பாடல்கள் : பாலைத் திணை
2, 8, 12, 18 ...... ஆகிய வரிசைப் பாடல்கள் : குறிஞ்சித் திணை
4, 14, 24, 34 ...... ஆகிய வரிசைப் பாடல்கள் : முல்லைத் திணை
6, 16, 26, 36 ...... ஆகிய வரிசைப் பாடல்கள் : மருதத் திணை
10, 20, 30, 40 ...... ஆகிய வரிசைப் பாடல்கள் : நெய்தல் திணை
நூல் |
அகநானூறு (அகப்பொருள்) |
வேறு பெயர்கள் |
நெடுந்தொகை |
எல்லை |
13 அடி முதல் 31 அடி வரை |
தொகுத்தவர் |
மதுரை உப்பூரிக்கிழார் மகனார் உத்திர சன்மர் |
தொகுப்பித்தவர் |
பாண்டியன் உக்கிரப் பெருவழுதி |
தமிழ் இலக்கிய வரலாற்றில் ஔவையார் என்ற பெயரில் பல பெண் புலவர்கள் இருந்ததாகத் தெரிகிறது. ஔவையார் எழுதியதாக கிடைத்த பாடல்களை, அவற்றின் காலம், பாடல்களின் சொல்லாடல் மற்றும் கருத்துகளைக் கொண்டு ஔவையார் என்ற பெயரில் 4 புலவர்கள் வாழ்ந்துள்ளதாக வரலாற்று அறிஞர்கள் கூறுகின்றனர்.
முதலாவதாக வாழ்ந்தவர் சங்ககால ஔவையார். இவர் சங்க இலக்கியங்களில் மொத்தம் 59 பாடல்களை இயற்றியுள்ளார்; அவை, புறநானூறு (33 பாடல்கள்), குறுந்தொகை (15 பாடல்கல்), நற்றிணை (7 பாடல்கள்), அ்கநானூறு (4 பாடல்கள்). இவர் அதியாமானுடன் மிகுந்த நட்பு கொண்டவர். இவர் அதியமான் நெடுமான் அஞ்சி, அதியமானின் மகன் பொகுட்டெழினி, சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி, பாண்டியன் கானப்பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதி, சேரமான் மாவெங்கோ ஆகிய மன்னர்களைப் பாடியுள்ளார்.
பக்திக்கால இறுதியில் விநாயகர் அகவலைப் பாடியவர் இரண்டாவது ஔவையார் .
ஆத்திசூடி, கொன்றைவேந்தன், மூதுரை, நல்வழி போன்ற நீதி நூல்களைப் பாடியவர் மூன்றாவது ஔவையார்.
தனிப்பாடல்களையும், முருகன் மீதான பக்திப் பாடல்களை யும் மிகுதியாகப் பாடியவர், இன்று நாம் பாட்டியாக வரைந்து போற்றி வணங்கும் ஒவ்வையார் இவரே.
பாடியவர் | பாரதம் பாடிய பெருந்தேவனார் |
திணை | பாடாண் |
துறை | கடவுள் வாழ்த்து |
பாவகை | நேரிசை ஆசிரியப்பா |
இப்பாடல், அகநானூற்றின் 400 பாடல்களில் சேராத, சில நூற்றாண்டுகளுக்குப் பின்னர் கடவுள் வாழ்த்தாக இணைக்கப்பட்ட பாடல். இச் செய்யுள் அகப்பொருள் பாடல்கள் கொண்ட அகநானூற்றின் நூலுக்கு புறப்பொருளான பாடாண் திணையைச் சார்ந்த கடவுள் வாழ்த்து அமைந்துள்ளது.
கார்விரி கொன்றைப் பொன்னேர் புதுமலர்த்
தாரன் மாலையன் மலைந்த கண்ணியன்
மார்பி னஃதே மையில் நுண்ஞாண்
நுதல திமையா நாட்டம் இகலடடுக்
கையது கணிச்சியொடு மழுவே மூவாய்
வேலும் உண்டத் தோலா தோற்கே
ஊர்ந்த தேறே சேர்ந்தோள் உமையே
செவ்வா னன்ன மேனி அவ்வான்
இலங்குபிறை அன்ன விலங்குவால் வையெயிற்
றெரியகைந் தன்ன அவிர்ந்துவிளங்கு புரிசடை
முதிராத் திங்களொடு சுடருஞ் சென்னி
மூவா அமரரும் முனிவரும் பிறரும்
யாவரும் அறியாத் தொன்முறை மரபின்
வரிகிளர் வயமான் உரிவை தைஇய
யாழ்கெழு மணிமிடற் றந்தணன்
தாவில் தாள்நிழல் தவிர்ந்தன்றால் உலகே.
கார்விரி கொன்றைப் பொன்னேர் புதுமலர்த்
தாரன் மாலையன் மலைந்த கண்ணியன்
மார்பி னஃதே மையில் நுண்ஞாண்
நுதல திமையா நாட்டம் இகலடடுக்
கையது கணிச்சியொடு மழுவே மூவாய்
வேலும் உண்டத் தோலா தோற்கே
ஊர்ந்த தேறே சேர்ந்தோள் உமையே
செவ்வா னன்ன மேனி அவ்வான்
இலங்குபிறை அன்ன விலங்குவால் வையெயிற்
றெரியகைந் தன்ன அவிர்ந்துவிளங்கு புரிசடை
முதிராத் திங்களொடு சுடருஞ் சென்னி
மூவா அமரரும் முனிவரும் பிறரும்
யாவரும் அறியாத் தொன்முறை மரபின்
வரிகிளர் வயமான் உரிவை தைஇய
யாழ்கெழு மணிமிடற் றந்தணன்
தாவில் தாள்நிழல் தவிர்ந்தன்றால் உலகே.
பாடாண்திணை: (பாடு + ஆண் + திணை)
பாடப்படும் ஆண்மகனது வெற்றி, புகழ், வீரம், கொடை, கல்வி, அருள் முதலிய பண்புகளைப் பாடிப் புகழ்வது பாடாண் திணையாகும்.
"பாடாண் பகுதி கைக்கிளைப் புறனே
நாடுங் காலை நாலிரண் டுடைத்தே" - தொல்காப்பியம் (பாடல் 78)
[பொருள்: பாடாண் திணை கைக்கிளை என்னும் அகத்திணைக்கு ஈடான புறத்திணை; ஆராய்ந்தால் எட்டு வகையினை உடையது. எட்டு வகையாவன: கடவுள் வாழ்த்து, வாழ்த்தியல், மங்கலம், செவியறிவுறுத்தல், ஆற்றுப்படை, பரிசிற்றுறை, கைக்கிளை, வசைவகை]
கடவுளைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு இயற்றப்படுவது கடவுள் வாழ்த்து.
பாரதம் பாடிய பெருந்தேவனார்
ஆசிரியப்பாவின் பொது இலக்கணம் பெற்று ஈற்று அயலடி (இறுதி அடிக்கு முந்தைய அடி) 3 சீர்களாகவும் (சிந்தடி), ஏனைய அடிகள் 4 சீர்களாகவும் (அளவடி) வருவது நேரிசை ஆசிரியப்பாவாகும்.